Thirukkuralagam
Kural 1151 of 1330

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.

Sellaamai Untel Enakkurai Matrunin Valvaravu Vaazhvaark Kurai

If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe

விளக்கம் — மு. வரதராசன்

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

விளக்கம் — கலைஞர்

பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்

Meaning (English)

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

Open the interactive app →